திருமலை: திருப்பதி கோயிலை படம் பிடித்த வெளிநாட்டு பக்தரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்கின்றனர். திருப்பதியில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோயிலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு பக்தர்கள் வந்துள்ளனர். அவர்கள் நேற்று ஏழுமலையான் கோயிலுக்கு வந்தனர். சுவாமி தரிசனத்திற்கு பிறகு தீர்த்தம் மற்றும் சடாரி ஆசிர்வாதம் செய்யக்கூடிய பகுதியில், தான் கொண்டுவந்த செல்போனில் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த தேவஸ்தான ஊழியர் அந்த பக்தரை பிடித்து விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். செல்போன் கொண்டு வரக்கூடாது என்பது தனக்கு தெரியாது என அப்போது பக்தர் தெரிவித்ததால் அவருக்கு கவுன்சலிங் செய்து மீண்டும் இதுபோன்று நடந்து கொள்ளக்கூடாது என கூறி அனுப்பி வைத்தனர்.
ஆனால் 2ம் கட்ட பாதுகாப்புக்கு பிறகு ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், வெளிநாட்டு பக்தர் எப்படி செல்போன் கொண்டுவந்தார் என்று கேள்வி எழுந்துள்ளது. இதனால் பாதுகாப்பு சோதனையில் குளறுபடி உள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ‘’சோதனையில் அலட்சியம் காரணமாகவே பக்தர் செல்போன் கொண்டு வந்துள்ளார். இதேபோன்று தீவிரவாதிகள் ஊடுருவினால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்குமே என்பதால் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.